புதுமைப் பெண் திட்டத்தில் கல்லுாரி மாணவிகள் வங்கி கணக்குடன் ஆதார்,செல்போன் எண் ஆன்லைனில் இணைக்க அறிவுறுத்தல்.!

கோவை: அரசு பள்ளிகளில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி தொடர, தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் கலெக்டர் தலைமையில், கல்லூரி கல்வி இணை இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, முன்னோடி வங்கி மேலாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், முதல் கட்டமாக, இறுதியாண்டு, இரண்டாமாண்டு படித்த மாணவிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவிகளுக்கு வழங்க ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.

அனைத்து கல்லூரிகளிலும், இப்பணிகளை கண்காணிக்க, நோடல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இறுதியாண்டு, இரண்டாமாண்டு படிக்கும் மாணவிகள் பலருக்கு வங்கிக்கணக்கில் தொகை வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக நலத்துறைத்துறையினர் கூறியதாவது:-
புதுமைப்பெண் திட்டத்தில், மாணவிகள் தங்களை பற்றிய தகவல்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.அதில் பல்வேறு தவறுகள் இருந்தன. தற்போது அந்தந்த கல்லூரி நிறுவனம் தகவல்களை பதிவேற்றும் வகையில், விண்ணப்பம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் தவறு ஏற்படுவதில்லை.

உதவித்தொகை கிடைக்காத மாணவிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண், செல்போன் எண் இணைத்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். கல்லூரி நோடல் அலுவலரை அணுகி, இதற்கு முன் பதிவேற்றம் செய்த தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சில மாணவிகள் வங்கிக் கணக்கு தொடங்காமல் உள்ளனர். சிலரிடம் செல்போன் எண் இல்லாமல் உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.