நர்சிங் மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி பாலியல் பலாத்காரம்-டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 20 வயது டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். கடந்த 12-ந் தேதி மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. மாணவி தனது காதலனை சந்தித்தார். அப்போது டிரைவர் மாணவியிடம் நாம் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி அவரை வால்பாறைக்கு கடத்தி சென்றார்.
பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து டிரைவர் மாணவியுடன் வால்பாறையில் அறை எடுத்து தங்கினார். அப்போது டிரைவர் மாணவியை பலாத்காரம் செய்தார். மாணவி வீட்டிற்கு வராததால் அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது டிரைவர் தங்களது மகளை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வால்பாறைக்கு விரைந்து சென்று அங்கு மாணவியுடன் அறை எடுத்து தங்கி இருந்த டிரைவரை கைது செய்து மாணவியை மீட்டனர். பின்னர் போலீசார் 17 வயது மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்த டிரைவர் மீது போக்சோ, குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம், பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.