12ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது.!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று தமிழ் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை இரண்டு மாநிலங்களிலும், 3 லட்சத்து 58 ஆயிரத்து 201 மாணவர்களும், 4 லட்சத்து 13 ஆயிரத்து 998 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என்று மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பேர் எழுத உள்ளனர்.

இன்று தமிழ் பாடத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கு அடுத்து வருகிற 5-ந்தேதி ஆங்கில பாடத் தேர்வு என்று ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 4 நாட்கள் இடைவெளி விடப்படுகிறது. இந்தத் தேர்வுக்காக 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உள்பட மின்சாதனம் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க மூன்று ஆயிரத்து 200 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், 43 ஆயிரத்து 200 தேர்வறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.