திருச்சியில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்… இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைவு.!!

மாநில அளவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சியின் ஒரு பள்ளி உள்பட 89 அரசு பள்ளிகளும், 46 அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசின் பகுதி உதவி பெறும் 28 பள்ளிகளும், 81 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 13 ஆதிதிராவிடர் நல பள்ளிகளும், ஆதிதிராவிட பழங்குடியினருக்கான ஒரு உண்டு உறைவிடப்பள்ளியும் என மொத்தம் 260 மேல்நிலை பள்ளிகள் உள்ளது. இதில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று  வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 371 மாணவர்களும், 16 ஆயிரத்து 244 மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 615 மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.
மேலும் (2020-21) கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையும், +2 மாணவர்களுக்கு 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கப்பட்டது. (2019-20) ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.94% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வியாண்டில் (2021-22) திருச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.93% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பு கல்வியாண்டில் (2022 – 2023) திருச்சி மாவட்டத்தில் 96.02 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்தாண்டு திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.74% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.42%, மாணவிகள் 97.65% தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக இந்த பொதுத் தேர்வை 1,261 பேர் இந்த தேர்வை எழுதவில்லை. மேலும் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.