கோவையில்10 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது : போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தகவல்..!

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த கணேசன் மகன் ஜீவானந்தம் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஜீவானந்தம் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். இதன் பேரில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளியான ஜீவானந்தம் (25) மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்காக உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது.

இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:-
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 10 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் . இவ்வாறு அவர் கூறினார்.