ரூ.20,000 கோடி இழப்பு… திரைப்பட திருட்டுக்கு 3 ஆண்டு சிறை – நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!!

டெல்லி: 40 ஆண்டுகளுக்குப் பின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. திரைத்துறைக்கு ரூ20,000 கோடி இழப்பு ஏற்படுத்தும் திரைப்பட திருட்டைத் தடுக்கும் இம் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு இது தொடர்பாக கூறி இருப்பதாவது: திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 லோக்சபாவில் நேற்று ஒப்புதல் பெற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஜூலை 27-ல் ராஜ்யசபாவில் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது .

1952-ம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் கடைசியாக 1984-ம் ஆண்டு திருத்தங்கள் செய்யப்பட்டதால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சில மதிப்பீடுகளின் அடிப்படையில் திரைத்துறைக்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படுத்தும் சினிமா திருட்டு அச்சுறுத்தலை முற்றிலுமாகத் தடுப்பதை இந்த வரலாற்று சிறப்புமிக்க மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறைந்தபட்சம் 3 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதோடு தணிக்கை செய்யப்பட்ட மொத்த உற்பத்தி செலவில் 5% வரை 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

நாடாளுமன்ற லோக்சபாவில் இம்மசோதா மீது பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “நமது வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மையைக் காட்டும் கதைசொல்லிகளின் நாடாக இந்தியா அறியப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் நமது திரைப்படத் துறை 100 பில்லியன் டாலராக வளர்ந்து, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும். மாறிவரும் காலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சினிமா திருட்டைத் தடுக்கவும், திரைத்துறையை மேலும் மேம்படுத்தவும் இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளோம். திரைத்துறைக்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படுத்தும் சினிமா திருட்டின் அச்சுறுத்தலை இந்த திருத்தங்கள் முழுமையாகத் தடுக்கும் “என்றார்.

இம்மசோதாவில் ஆன்லைன் சினிமா திருட்டின் உண்மையான அச்சுறுத்தல் தண்டனைக்குரியதாக மாற்றப்பட்டுள்ளது. இனி சினிமா பைரசியில் ஈடுபட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி; திரைப்படத் தயாரிப்பில் 5% அபராதம் விதிக்கப்படும். திரைப்படங்களை எந்த வயதினர் பார்க்க வேண்டும் என்பதற்கான புதிய ரேட்டிங் முறை கொண்டுவரப்படுகிறது. நடைமுறையில் உள்ள UA, A சான்றுகளுடன் இப்புதிய ரேட்டிங் முறையும் இருக்கும்.