பில் தானே கேட்டீங்க.. வந்துருச்சு.. சீரியல் நம்பருமா கேட்டீங்க.. வானதி சீனிவாசனின் பதில்..!

பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தனது தொகுதிக்குட்பட்ட திருக்கோவில்கள் மேம்பாட்டிற்காக ஆலயம் எனும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியிலுள்ள அருள்மிகு மதுரை வீரன் கோவிலில் திட்டத்தை துவக்கி வைத்த அவர் முதற்கட்டமாக சுமார் 20 கோவில்களுக்கு தலா 5 லிட்டர் தீப எண்ணையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து கோவில்களுக்கும் மாதம் ஐந்து லிட்டர் தீப எண்ணை வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கோவில்களை ஒருங்கிணைக்கும் தன்னார்வ குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தொகுதியிலுள்ள 20 கோவில்களுக்கு மாதம் தோறும் தீப எண்ணை வழங்குவது உட்பட கோவில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வது என தீர்மானித்துள்ளோம். கோவிலில் பூ கட்டும் பெண்களுக்கு அரசின் திட்டங்களை பெற்று தரும் பணிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார். ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் கல்வி சாலையைபோல் கோவில்களும் முக்கியம்.

நிறைய இடங்களில் கோவில்களுக்கு வருமானம் இல்லாத நிலையில் பூஜை முறைகளிலிருந்து விலகி செல்வதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. எந்த சூழலிலும் கோவில்களில் விளக்கெரியாமல் இருக்க கூடாது என்பதற்காக இப்பணியை துவங்கியுள்ளோம். வரக்கூடிய காலங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். தீப ஒளியை போல் இந்த தொகுதி மக்களின் வாழ்விலும் ஒளி உண்டாகும்.

பாஜக மாநில தலைவர் இன்று வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் மக்கள் மன்றத்தின் முன்பாக விவாத பொருளாக உள்ளது. தமிழக அரசியலில் விவாதத்தை மாநில தலைவர் வைத்துள்ளார். எதையும் சந்திக்க தயார் என கூறி திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என திமுக-வினர் நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் ரஃபேல் வாட்ச் பில் முரண்பாடு தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், பில் கேட்டீர்கள் பில் வந்ததா? இல்லையா?. பில் கேட்டீர்கள்.. பில் சீரியல் நம்பர் கேட்டீர்களா?? எனவும் பதிலளித்தார்