ஓட்டுக்கு வழங்கும் பரிசுக்காக பெண்கள் நாள் கணக்கில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே காத்திருக்கின்றனர்- வானதி சீனிவாசன் கிண்டல் பேச்சு.!!

அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்களை பெற பெண்கள் வேலைக்கு செல்லாமல் நாள் கணக்கில் வீட்டில் காத்திருப்பதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பெண் வாக்காளர்களை கிண்டல் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நகர் புற உள்ளாட்சி தேர்தலில் கருமத்தம்பட்டி நகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “நகராட்சியில் வார்டு உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நிதியை முறையாக செயல்படுத்த பாஜகவினரை தேர்வு செய்ய வேண்டும், மத்திய அரசு வழங்கும் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் எளிதாக கிடைக்க பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கி வருகின்றன, அதனை பெற பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. எந்தக் கட்சி ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு பாஜகவினருக்கு வாக்களிக்க வேண்டும்.

மற்ற கட்சியை சார்ந்தவர்கள் வழங்கும் 300 ரூபாய் பரிசுப் பொருட்களை பெறுவதற்கு பெண்கள் 4 நாட்கள் வரை வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே காத்துக்கிடக்கின்றன. இதனால் 2,000 ரூபாய் வரை பெண்கள் சம்பளத் தொகையை இழக்கின்றனர்” எனக் கூறினார்.