கொள்ளையை தடுத்ததால் பெண் அரிவாளால் வெட்டி படுகொலை – பக்கத்து வீட்டுக்காரர் கைது..!

கோவைபெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் , பாலாஜி நகரை சேர்ந்தவர் மனோகர் (வயது 55) இவரது மனைவி ரேணுகா ( வயது 40) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மனோகர் தனது மகள்களுக்கு எடுத்த துணியை தைப்பதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு காந்திபுரம் சென்று விட்டார் . மாலை 3:30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது ரேணுகா அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெளத்தில் வீட்டில் பிணமாக கிடந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளியை பிடிக்க கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ். பி நமச்சிவாயம் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் .அதில் ஒரு நபர் கையில் அரிவாளுடன் சுவர் ஏறி குதித்து ரேணுகாவின் வீட்டின் உள்ளே செல்வது பதிவாகி இருந்தது .உடனே அந்த நபர் யார் ?என்று விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட ரேணுகாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் ( வயது 35) என்பது தெரியவந்தது . இதையடுத்து வீட்டில் பதுங்கி இருந்த சதீஷை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர் .அதில் ரேணுகாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

போலீசில் அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நேற்று முன் தினம் மாலையில் ரேணுகாவின் கணவர் மற்றும் 2 மகள்கள் வெளியே சென்றனர் .அப்போது ரேணுகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார் .. இதை அறிந்து அரிவாளுடன் ரேணுகாவின்  வீட்டிற்குள் சென்றேன். அவர் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்தேன். அப்போது அவர் கத்தினார். சத்தம் போடாதே என்று கூறினேன் .அவர் கேட்கவில்லை. இனிநாம் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து அரிவாளால் ரேணுகாவை வெட்டி கொலை செய்தேன். கார் வாங்கிய கடனை அடைப்பதற்காகதான் இந்த கொலையை செய்தேன்.இவ்வாறு  அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்