மஞ்சூரில் அரசு பேருந்து வாகனங்களை வழி மறித்த நின்ற காட்டு யானைகள்..!!

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரண்டு குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகிறது. பெரும்பாலும் சாலைகளிலேயே யானைகள் நடமாடுவதால் இவ்வழியாக செல்லும் அரசு பஸ்கள், தனியார் வாகனங்களை யானைகளின் வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுமார் 40கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவையில் இருந்து மஞ்சூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இரவு சுமார் 8மணியளவில் கெத்தை அருகே சென்று கொண்டிருந்தபோது குட்டிகளுடன் காட்டு யானைகள் வழியை மறித்தபடி நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக ஒதுக்கி நிறுத்தினார். இதை தொடர்ந்து சுமார் முக்கால் மணி நேரம் யானைகள் வழியை மறித்தபடி நின்றிருந்த நிலையில் குட்டிகள் முன்னோக்கி நகர்ந்துள்ளது. இதை தொடர்ந்து யானைகளும் குட்டிகளை பின் தொடர்ந்து சென்று சாலையோரம் இருந்த காட்டுக்குள் இறங்கி சென்றது. இதை தொடர்ந்து அரசு பஸ் அங்கிருந்து மஞ்சூருக்கு புறப்பட்டு சென்றது. இந்நிலையில் நேற்று காலை மஞ்சூர் பகுதியில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் வாகனத்தையும் மந்து என்ற இடத்தில் வழியை மறித்துள்ளது. நீண்ட நேரத்திற்கு பின் யானைகள் அங்கிருந்து சென்றதை தொடர்ந்து தனியார் வாகனம் புறப்பட்டு சென்றுள்ளது. மேலும் இந்த யானைகள் சாலையோரம் வளர்ந்துள்ள சிறு மரங்கள், கொண்டை ஊசி வளைவுகளில் அமைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளையும் கீழே சாய்த்துள்ளது. மஞ்சூர் கோவை சாலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக யானைகளின் நடமாட்டம் இல்லாததால் இவ்வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தது. இந்நிலையில் காட்டு யானைகள் மீண்டும் கெத்தை பகுதிக்கு திரும்பியுள்ளது.