மனைவியின் தம்பியை கத்தியால் குத்தி கொலை – அக்கா கணவருக்கு ஆயுள் தண்டனை..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காமராஜ் நகரில் வசிப்பவர் பழனி ராஜா (வயது 31) கூலித் தொழிலாளி.இவர் அதே பகுதியில் உள்ள தனது அக்காள் அனுசியா ( வயது 35) வீட்டில் வசித்து வந்தார் .அக்காள் கணவரான கனகரத்தினம் ( வயது 45) அடிக்கடி குடித்துவிட்டு அனுசியாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதை பழனி ராஜா கண்டித்தார். இதனால் கனகரத்தினத்துக்கும் பழனி ராஜாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது . இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கனகரத்தினம் இனிமேல் என் வீட்டுக்கு வரக்கூடாது என்று கூறி பழனி ராஜாவை விட்டு வெளியே அனுப்பி உள்ளார். இருந்தபோதிலும் அனுசியா தனது தம்பி பழனிராஜாவை வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார் .இதை பார்த்த கனகரத்தினம் கோபமடைந்து மீண்டும் பழனி ராஜாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு வெளியே சென்று உள்ளார். பின்னர் மாலை வீட்டுக்கு வந்த போது வீட்டில் பழனி ராஜா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஏன் இங்கு வந்தாய் ?என்று கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டார் .இதில் ஆத்திரமடைந்த கனகரத்தினம் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து பழனி ராஜாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பழனி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார் .இது குறித்து வால்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து கனகரத்தினத்தை கைது செய்தனர்.பின்னர் இது தொடர்பான வழக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார் .இந்த விளக்கு விசாரணைமுடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது அதன்படி குற்றம் சாட்டப்பட்ட கனக ரத்தினத்துக்கு ஆயுள் தண்டனையும் ,ரூ 1000 அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கினார்.