வெல்லப்போவது யாரு..? அதிமுக பொதுக்குழு வழக்கு: போட்டி போடும் ஒபிஎஸ், இபிஎஸ்-உச்சகட்ட பரபரப்பில் இன்று தீர்ப்பு..!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தங்கள் பலத்தை நிரூப்பிக்க பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர்.

மேலும் அதிமுகவை கைபற்ற சட்ட ரீதியான போராட்டங்களும் நடந்து வருகின்றன. இதனிடையே கடந்த ஜூலை 7 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சியில் கட்டுப்பாட்டை மீற செயல்பட்டதாக ஓபிஎஸ் உட்பட்ட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து அதிமுக அலுவலத்தில் தர்ணாவில் ஈடுபட்ட ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும் இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள்ளு நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி கிருஷணன் ராமசாமியிடம் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதி அளித்த பரிந்துரையின் படி, உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த 11 ஆம் தேதி வழக்கு விசாரணையின் போது , அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழுவை எதிராக வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.