ஊதிய உயர்வு விவகாரம் : மின்வாரிய ஊழியர்களுடன் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை..!

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து கடந்த 3-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஜனவரி 10-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை, மின்வாரியம் உள்ளிட்டவற்றுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

இதையடுத்து, ஜனவரி 3-ம் தேதி தொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர், மின்வாரிய நிர்வாகம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இன்று (ஜன. 6-ம் தேதி) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இது தொடர்பாக மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ‘கடந்த பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கை தொடர்பாக மின்வாரியம் தரப்பில் எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. குறிப்பாக, ஊதிய உயர்வு தொடர்பாக ஒரு முன்மொழிவு கூட எடுத்து வரவில்லை.

அரசு ஒப்புதல் அளிக்கக் காத்திருக்கிறோம். எங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மின்வாரியம் தானே தவிர அரசு அல்ல. எங்களது கோரிக்கைகளுக்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டாவிட்டால், திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்’ என்று கூறினர்.