திருச்சியில் பிரதமரை சந்திக்கும் ஓபிஎஸ் அதிமுக தலைமை கழக்கம்….

திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா இன்ற நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.
இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள திருச்சிக்கு இன்று காலை 10 மணிக்கு வருகிறார் பிரதமர். இதற்காக திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 33 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியை திருச்சி விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதல்வர் ஸ்டாலினும் வரவேற்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் திருச்சி வரும் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க நேரம் ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது அதிமுகவின் உள்கட்சி விவகாரம், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொல்லி வந்த நிலையில் அவரது மறைவுக்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது. ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லவில்லை. அதிமுகவின் வெற்றி வாய்ப்பும் கேள்விக்குறியானது. அது போல் 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 4 இடங்களில் வென்றது. எனினும் அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்த அளவில் சரிந்தது. இதுகுறித்து தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் பேசி வந்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெல்லவில்லை என மூத்த நிர்வாகி சி.வி.சண்முகம் பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி யார் என்ற பிரச்சினை எழுந்தது. தேர்தலில் வெற்றி பெற்ற எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது அதிமுகதான் எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால் பாஜகவோ 4 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு தாங்கள் தான் எதிர்க்கட்சி என சொல்லி வந்தது. இது தொடர்பாகவும் இரு கட்சிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

அதிமுகவை சீண்டும் அளவுக்கு பாஜக நிர்வாகிகளும் பேசினர். மேலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்திலிருந்து 25 பாஜக எம்பிக்களை அனுப்புவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கூறி வந்தனர். இதுவும் அதிமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இரு கட்சிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு பாஜகவுடன் கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தேவைற்ற சுமை, பாவ மூட்டை, விட்டது சனியன் என்றெல்லாம் கூறி பாஜக கூட்டணி முறிவை அதிமுக நிர்வாகிகள் கொண்டாடினர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியை முறித்து நாடகம் போடுவதாகவும் பாஜகவை எந்த விவகாரத்திலும் விமர்சிக்காமல் இருப்பது ஏன் என்றும் திமுக வினவியது. இதையடுத்து அண்மையில் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் கூட்டணி முறிவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் பாஜக கோலோச்ச எந்த கட்சியுடனாவது கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது. அந்த வகையில் தென் தமிழகத்தில் செல்வாக்குமிக்கவராக கருதப்படும் ஓபிஎஸ்ஸுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என தெரிகிறது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது குறிப்பாக அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக அமைந்திருக்கிறது.