கோவையில் தொடரும் வன்முறை: ரவுடிகளின் பட்டியல் எடுக்கும் போலீசார்- குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஏற்பாடு..!

கோவை மாநகர் அடுத்தடுத்து அரங்கேறிய 2 கொலைகளால் கடந்த 2 தினங்களாகவே மிகுந்த பதற்றத்துடனேயே காணப்படுகிறது. அதிலும் ஒரு கொலையில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் பகுதியில் நேற்று முன்தினம் மதுரையை சேர்ந்த சத்தியா பாண்டியை 5 பேர் கும்பல் அரிவாள், துப்பாக்கியுடன் ஒட, ஒட விரட்டி சென்றனர்.
வீட்டிற்குள் சென்று பதுங்கிய சத்தியா பாண்டியை அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதேபோல் நேற்று மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் கோவில்பாளையத்தை சேர்ந்த கோகுலை பழிக்குப்பழியாக 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை துணை கமிஷனர் சந்திஷ் தலைமையிலான தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

கோவை மாநகரில் சினிமா பாணியில் ரவுடிகள் கும்பலாக பிரிந்து மோதுவது தொடர் கதையாகி வருகிறது. ஒரு கும்பலை சேர்ந்தவர்கள், எதிர் கும்பலை சேர்ந்தவர்களை வெட்டுவதும், பதிலுக்கு அவர்கள் வெட்டுவதும் என சண்டை நடந்து வருகிறது. குறிப்பாக கண்ணப்ப நகர், மோர் மார்க்கெட், ரத்தினபுரி, சித்தாபுதூர், செல்வபுரம், சரவணம்பட்டி பகுதிகளில் அதிகளவில் ரவுடி கும்பல் உள்ளது.

இவர்கள் வாகனம் பறிமுதல், கஞ்சா விற்பனை, ரியல் எஸ்டேட் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்த தொழில் போட்டியில் தான் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அடிக்கடி மோதி கொள்வார்கள். இதுதவிர ஆங்காங்கே சில கத்திக்குத்து சம்பவங்கள் மற்றும் பல்வேறு குற்ற செயல்களும் நடந்து வருகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிய அளவில் நடந்து வந்த நிலையில் தற்போது துப்பாக்கியால் சுட்டு கொல்வது, மக்கள் நிறைந்த இடத்தில் கொலை செய்வது என வன்முறை சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது.

இதையடுத்து போலீசார் கோவை மாநகர் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த பகுதி போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் பட்டியலை சேகரித்து வருகிறார்கள். இதில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி வழக்குகள் சம்பந்தப்பட்டவர்களை கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து, அவர்களை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்க முடிவு செய்துள்தாகவும் கூறப்படுகிறது. தற்போது போலீசார் அதற்கான பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகிறார்கள்.