கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 87 பேருக்கு அபராதம்..!

கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாரவிடுமுறையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கோத்தகிரி பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வருகை புரிகின்றனர். குறிப்பாக சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மலைப்பாதையில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டும், அதிக வேகம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கோத்தகிரி போக்குவரத்து போலீசார் அரவேணு, சக்கத்தா, டானிங்டன், கட்டபெட்டு, பாண்டியன் பார்க் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் சிறப்பு சார்பு இன்ஸ்பெக்டர்கள் ஜான், ராஜேந்திரன், போலீசார்கள் அப்பாஸ், சுரேஷ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதில் கடந்த 2 நாட்களில் போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு மொத்தம் ரூ.84 ஆயிரம் அபராதம் மற்றும் குடிபோதையில் வாகனங்களை இயக்கிய 3 வாகன ஓட்டிகளுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அபாயகரமான வளைவுகள், மலைப்பாதையில் எவ்வாறு வாகனங்களை முறையாக இயக்க வேண்டும், சமவெளி பகுதிகளில் வாகனங்களை இயக்கும் போது 2-வது கியரில் வாகனங்களை இயக்க வேண்டும், அபாயகரமான வளைவுகளில் ஒலி எழுப்ப வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது.