வந்தாச்சு… அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்… உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி செய்தி.!!

வரும் கல்வியாண்டு ( 2022-2023 ) முதல் அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.

தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பினை முடித்தப்பின்னர் உயர்கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ், ஆறு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் கலந்தாய்வா? என்பது குறித்து கல்வியாளர்களுடன் வரும் 17ம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும், நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் பொறியியல் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார். மேலும், தொலைந்துபோன சான்றிதழ் பெற பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அமைச்சர் தெரிவித்துள்ளார்.