கோவை வாலாங்குளத்தில் காதல் ஜோடிகளின் சில்மிஷத்தை கண்காணிக்க வந்தாச்சு காமிரா..!

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது படகு சவாரி திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் வாலாங்குளத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி பூங்காவில் காதல் ஜோடிகள் நீண்ட நேரம் சில்மிஷ லீலைகளில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இவர்களின் அத்துமீறல்களை அந்த பகுதியில் செல்வோர் கண்டித்தாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை. இரவு நேரங்களில் சில ஜோடிகள் இருட்டு மறைவில் காதல் லீலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் அந்த பகுதிக்கு சென்று காதல் ஜோடிகளை பிடித்து அறிவுரை கூறி கண்டித்தனர். ஆனாலும் தொடர்ந்து காதல் ஜோடிகள் பூங்காவிற்கு வந்து கொண்டு தான் இருகிறார்கள். மேலும் வாலாங்குளத்தின் கரையில் போதை மாத்திரை கும்பல், கஞ்சா விற்பனை கும்பல், பிக்பாக் கெட் திருடர்கள் குவிந்து வருகின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி பூங்கா பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையும் உள்ளது. இங்கே மதுகுடிக்கும் போதை கும்பல் பூங்காவில் உலா வந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்வதும் வாடிக்கையாக நடக்கிறது. போலீசார் எப்போதாவது வந்து அடாவடி கும்பலை விரட்டியும் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில், வாலாங்குளத்தின் முக்கிய பகுதிகளை கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டது.

இரவு நேரத்திலும் காட்சிகளை துல்லியமாக பதிவு செய்யும் வகையில் சுழலும் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் மூலமாக குளக்கரையில் நடக்கும் அத்துமீறல்களையும், குற்றங்களையும் கண்டறிய முடியும். பொது இடங்களில் அத்துமீறுவோரின் அட்டூழியம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்காணிப்பு காமிரா காட்சிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் பிரதான அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.மேலும் இந்த பகுதியில் காவலாளிகளை நியமித்து அடாவடி கும்பல்களை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.