கோவை, பெங்களூரு இடையே உதய் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கம்.!!

கோவை, பெங்களூரு இடையில் இயக்கப்பட்டு வந்த உதய் எக்ஸ்பிரஸ் கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

கோவையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பெங்களூருவுக்கு சென்று வருவது வழக்கம். சிலர் விமானம் மூலமாக பெங்களூரு செல்வர், சிலர் ரயில் அல்லது பேருந்து மூலமாகவும் சென்று வருவர்.

கோவை, பெங்களூருவுக்கு பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதே போன்று உதய் எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்த நிலையில் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உதய் எக்ஸ்பிரஸ் கோவையில் இருந்து வருகின்ற மார்ச் 31ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. அதிகாலை 5:45 மணிக்கு புறப்பட்டு கர்நாடக மாநிலம், பெங்களூரு கே.ஆர்.புரம் சென்றடையும். பின்பு மதியம் 2:15 மணிக்கு கே.ஆர்.புரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.00 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும். வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.