மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொன்ற வழக்கில் திரிணமூல் காங். தலைவர் கைது: மம்தா பானர்ஜி அதிரடி நடவடிக்கை.!!

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் வட்டார தலைவர் கைது செய்யப்பட்டார்.

மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதி யில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் போக்டுய் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் பெரும் பதற் றத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டார். மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர், ”இதுபோன்ற கொடூரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஆளுநர் மாளிகையில் நான் அமர்ந்து கொண்டிருக்க முடியாது” என்றார். ஆளுநரின் கருத்து தேவையற்றது என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணையை மேற்கொண்டுள்ளது. கலவரம் தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலவரத்தில் 8 பேர் தீ வைத்து கொல்லப்பட்டது தொடர்பாக ராம்புராட் வட்டார திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அனருல் ஹூசைன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. எனினும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் தயக்கம் காட்டினர்.

இந்நிலையில், அவரைக் கைது செய்ய முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ”ராம்புராட் வட்டார திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அனருல் ஹூசைன் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் அவர் கைது செய்யப்பட வேண்டும். அவருக்கு எதிராக போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தங்கள் கடமையைச் செய்யவில்லை. அந்தப் போலீஸ்அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.

இதையடுத்து, ராம்புராட் வட்டார திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அனருல் ஹூசைனை நேற்று பிற்பகல் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, எரித்துக் கொல்லப்பட்ட உடல்கள் ராம்புராட் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில், எரிக்கப்படுவதற்கு முன் 8 பேரும் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு பின், உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தாக்கப் பட்டதற்கான தடயங்கள் தெரிய வந்துள்ளதாகவும் மருத்துவமனை தடயவியல் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, பிர்பும் மாவட்டத்தில் கலவரம் நடந்த போக்டுய் கிராமத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சென்றார். எரித்துக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நஷ்ட ஈடும் குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் வீடுகளை இழந்தவர்கள் மீண்டும் வீடுகள் கட்டிக் கொள்வதற்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் மம்தா அறிவித்தார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக ஆயுதங்கள், வெடிபொருட்கள் வைத்திருப்பவர்களிடமிருந்து அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்டுய் கிராம மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் மம்தா கூறினார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று கலவரம் நடந்த போக்டுய் கிராமத்துக்கு கட்சி நிர்வாகிகளுடன் செல்ல முயன்றார். ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜி வரும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க, அந்த கிராமத்துக்கு முன்னதாக ஸ்ரீ நிகேதன் என்ற இடம் அருகே ஆதிர் ரஞ்சன் சவுத்ரியையும் காங்கிரசாரையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் காங்கிரஸ் நிர்வாகிகளும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.