திருச்சி விமான பயணியின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்க கட்டி கடத்தல்.!!.

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து எடுத்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

தேர்தல் சமயம் என்பதால் கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த தங்கம் கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது காலணியின் அடிப்பகுதியில் ரூ.28.86 லட்சம் மதிப்பிலான 401.5 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் இன்று அதிகாலை திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகள் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற பயணி, தான் அணிந்திருந்த ஜட்டியில் பேஸ்ட் வடிவில் மறைத்து கடத்தி வந்த 460 கிராம் எடையுள்ள, 33 லட்சத்து 15 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்தும் வழக்கு பதிவு செய்து அந்த நபரிடம் சுங்க வரித்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.