தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள்- கண்காணிப்பை தீவிரப்படுத்த நீலகிரி மக்கள் கோரிக்கை..!

ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறதா? என்பது குறித்து வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையினர், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சார்பில் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருந்தாலும் பல இடங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாடிக் பொருட்களை பயன்படுத்துகின்றனர். நீலகிரிக்கு வந்தவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிக அளவில் காணப்பட்டது. சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி தட்டு, டம்ளர் என தடைசெய்ய ப்பட்ட பொருட்களை பயன்படுத்திவிட்டு அங்கேயே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே மாவட்டத்தின் நுழைவு வாயிலிலேயே வாகனங்களை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனை செய்த பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.