கோவை போலீஸ் அருங்காட்சியகத்தை பார்வையிட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி..!!

கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை ரெயில் நிலையம் எதிரில் தமிழ்நாடு போலீஸ் துறை ஹமில்டன் கிளப் அமைந்துள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் காரணமாக தற்காலிகமாக பொதுமக்கள் பார்வையிட அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளதால், (திங்கட்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும்) பொதுமக்கள் பார்வைக்கு காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதியளிக்கப்படுகிறது. அருங்காட்சியகத்தின் முழு பயனைப் பெறக்கூடிய வகையில் இலவச “வழிகாட்டு பயணம்” கீழ்கண்ட நேரங்களில் நடத்தப்படும்.
காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை, மதியம் 12.30 மணி முதல் 01.30 மணி வரை, மதியம் 03.00 மணி முதல் 04.00 மணி வரை, மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போலீஸ் பேண்ட், போலீஸ் நாய் கண்காட்சி ஆகியவை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடத்தப்படும். வார நாட்களில் இரவு 7 மணி முதல் 10மணி வரை திறந்தவெளி பகுதியை கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வாடகை அடிப்படையில் கொடுக்கப்படும். மேலும் பார்வையாளர்களுக்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.10 மட்டும் வசூலிக்கப்படும். இதில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பார்வையாளர்கள் கட்டணம் இலவசம். அரசு சாரா மற்ற தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பார்வையாளர்கள் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.5 மட்டும் வசூலிக்கப்படும்.இந்த வாய்ப்பினை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகர் போலீஸ் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.