அனைத்து மாவட்டங்களிலும் 15 மாதங்களில் அமல்படுத்தனும் -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விசாரிக்கும் சிறப்பு அமர்வு நீதிபதிகள், மலை பிரதேசங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபாட்டில்களுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்று, காலி பாட்டில்களை திரும்பி செலுத்தும்போது அந்த தொகையை திருப்பி  கொடுக்கும் வகையில் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டனர்.

இது தொடர்பான வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்திய பின், கடந்தமாதம் 95 சதவீத மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டதாக டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை படிப்படியாக இரண்டு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் 15 மாதங்களில் அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

முன்னதாக நீதிபதிகள் என்.சதீஷ் குமார் மற்றும் டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட காலி மதுபாட்டிலை திரும்பப் பெறும் திட்டத்தின்படி, கோவை தெற்கு மாவட்டத்தில் 95% காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டன. கோவை வடக்கில் 94%, பெரம்பலூரில் அதிகபட்சமாக 99% காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டன. இந்த இரு மாவட்டங்களில் ஜூன் மாதம் வரை விற்பனை செய்யப்பட்ட 5.83 கோடி காலி பாட்டில்களில் 5.52 கோடி காலி பாட்டில்கள் வாடிக்கையாளர்களால் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, சேலம், வேலூர், நாமக்கல், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மலைப்பகுதி மாவட்டங்களில் 96.2% காலி பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டது. டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு ரூ.1.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் கிடைத்த வருவாயை மதுபாட்டில்கள் வைக்கப்படும் கிடங்கிற்கு வாடகைக்கு எடுப்பதற்கு செலவிடப்படும் என்று நீதிபதிகள் என்.சதீஷ் குமார் மற்றும் டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.