தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் வளரும் ஊராக திருப்பூர் உள்ளது – ஸ்டாலின் புகழாரம்..!!

திருப்பூர்: தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் வளரும் ஊராக திருப்பூர் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருப்பூர் பல்வேறு தொழில்களில் முன்னேறி வருகிறது எனவும், திருப்பூரை போன்று மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது விருப்பம் என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ திருப்பூர் மண்டல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 167.58 கோடி ரூபாய் அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொழில்முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பித்தார்.

பெருந்தொழில்களை மட்டுமே நம்பி இருக்காமல் சிறு, குறு, நடுத்தர தொழில் ஊக்கமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். முதலீட்டாளர் மாநாடு மூலம் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு ரூ.2.20 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அரசின் உத்தரவாதத்தால் வங்கிகள் போட்டிப் போட்டு கடன் அளிக்க முன் வருவார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.
இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதார மூலங்களை வழங்கி ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், திருப்பூரில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ திருப்பூர் மண்டல மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் தேங்காய் மட்டையிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் சுமார் 4500 நிறுவனங்கள், ஆண்டிற்கு சுமார் 8000 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டும் வகையில் செயல்பட்டு வருகின்றன. இத்தொழில் மேலும் பன்மடங்கு அதிகரிக்க தேவையான வளங்களும், வாய்ப்புகளும் இங்கு உள்ளன என்பதனை அறிந்து, தமிழ்நாடு அரசு, 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், கயிறு வணிக வளர்ச்சிக்கென 5 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ‘தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்’ அமைக்கப்படும் என்று அறிவித்தது. இதன்படி, அறிவிக்கப்பட்ட ஐந்து மாதங்களுக்கு உள்ளாகவே, புதிய கயிறு குழுமங்கள் அமைத்தல், புதிய சந்தைகளை அடையாளம் காணுதல், நுகர்வோருடன் பிணைப்பை ஏற்படுத்தி, கயிறு வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதலை உலக அரங்கிற்கு கொண்டு செல்லுதல், நவீன வசதிகளுடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களை உருவாக்குதல், இத்தொழில் துறையில் புதுமைகளை அடையாளம் கண்டு மேம்படுத்த தொழில் கல்வி கூட்டாண்மையை உருவாக்குதல், ஆகிய இலக்குகளை செயல்படுத்திடும் வகையில், கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள “தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்” என்ற புதிய நிறுவனம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மூலம் பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு 36.60 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 26.58 கோடி ரூபாய் அரசு உதவியுடன் நான்கு புதிய கயிறு குழுமங்கள் அமைப்பதற்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நிதி வசதியினை பிணையமின்றி எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் என்ற புதிய திட்டத்தினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், ரூ.40 இலட்சம் வரையுள்ள கடன்களுக்கு 90 விழுக்காடு உத்தரவாதமும், ரூ.40 இலட்சம் முதல் ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கு 80 விழுக்காடு உத்தரவாதமும், ஒன்றிய அரசின் குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்துடன் (CGTMSE) இணைந்து தமிழ்நாடு அரசு அளிக்கிறது.

இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, பொதுவாக வங்கிக் கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் களையப்பட்டு அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்படுவதால், கடன் விண்ணப்பப் பரிசீலனை செய்யும் நேரம் குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தாய்கோ வங்கியிலிருந்து கடன் பெறவிருக்கும் தொழில் முனைவோர்களுக்கும் பயனளிக்கும் விதமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் “தரமதிப்பீடு” (Credit score), நிறுவனங்களின்

‘கடந்த கால கடனை திருப்பி செலுத்திய காரணி (CIBIL score)’ மட்டுமல்லாமல் இதர நிதிநிலை செயல்பாடுகளையும் கொண்டு இணையதளம் வாயிலாகவே செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தரமதிப்பீடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கிகள் / நிதி நிறுவனங்களின் மூலம் கடன் பெற பேருதவியாக அமையும். மேற்கண்ட அனைத்து நடைமுறைகளையும் இந்தியாவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவுள்ள முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கென தமிழ்நாடு அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இத்திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக, கடன் உத்தரவாதத்துடன் 1.19 கோடி ரூபாய்க்கான கடன் தொகையினை, திருப்பூர் மண்டலத்தை சார்ந்த 5 பயனாளிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். இதுமட்டுமின்றி, 70-க்கும் மேற்பட்ட பிற பயனாளிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 17 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று இன்றைய தினமே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவார்கள்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தொகையை மிகவும் காலதாமதமாக பெறும் சூழல் உள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கோடு முதற்கட்டமாக சட்டப்பூர்வ வாரியங்கள், மாநிலத்தின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தலைமை கூட்டுறவு நிறுவனங்களை, ட்ரட்ஸ் (TReDS) எனப்படும் வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளங்களின் கீழ் கொண்டு வர தேவையான மென்பொருள் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளத்தினை (TN TReDS) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இத்தளத்தின் சிறப்பம்சமானது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் விற்பனை பட்டியல்கள் (Sale Bills) மீதான கடன் அளிக்கும் வங்கிகளுக்கு 179 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பணம் பெறப்படவில்லை எனில் 180-வது நாள் தமிழ்நாடு அரசின் தாய்கோ வங்கி Auto debit முறையில் தொகையை வங்கிக்கு அளித்து விடும். தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவாதத்தின் மூலம், மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாங்கள் பொருட்கள் வழங்கியதற்கான பட்டியலை இத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் பொழுது,

வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு மிகக் குறைந்த வட்டியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான கடன் அளிக்கும் வாய்ப்பு TN TReDS -னால் அதிகரிக்கும். இதனால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ‘நடைமுறை மூலதனக்கடன் தேவை’ குறைந்திட வாய்ப்புள்ளது. முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் TN TReDS தளங்களுடனுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த முதல் மூன்று தொழில் முனைவோர்களுக்கு அவர்களுக்கான தள்ளுபடி கடன் தொகையினை வழங்கினார்.

FaMe TN குறைந்த வட்டியில் பிணையில்லா கடன் பெறுதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஏற்றுமதிக்கு தேவையான உதவிகளைச் செய்தல், விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், நவீன தொழில் நுட்பங்களை செயல்படுத்துதல், தொழிலாளர்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்தல், வரி மற்றும் தணிக்கை போன்றவற்றிற்கான வசதிகள் ஆகிய தேவைகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிடM-TIPB (MSME-Trade and Investment Promotion Bureau) நிறுவனம் செயல்பட்டு வந்தது. தொழில் முனைவோர்கள் தங்களது தொழிலில் முழுக்கவனத்தையும் செலுத்திடவும், அவர்களது தேவைகளை நிறைவேற்றிடவும் தமிழ்நாடு அரசால் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” என்ற புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைச் செயல்படுத்த M-TIPB நிறுவனம் இன்று முதல் “FaMe TN” (Facilitating MSMEs of Tamil Nadu) என்ற புதிய பெயரில் செயல்படும். அனைவருக்கும் அனைத்தும் என்ற வகையில் சமச்சீரான ஒருங்கிணைந்த வளர்ச்சியினை குறிக்கும் விதமாக அமைந்துள்ள “FaMe TN” முன்னெடுப்பின் இலச்சினையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வெளியிட்டு, “தொழில் தொடங்குவது எப்படி” என்ற FaMe TN-ன் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வெளியிட்டார்.

இம்மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகர்கள் இணைய வர்த்தக தளங்களின் வாயிலாக புதிய வாய்ப்புகளை பெறுவதற்கு, வழிகாட்டிடும் வகையில், FaMe-TN நிறுவனம் மற்றும் Open Network for Digital Commerce (ONDC) நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும்;

FaMe-TN நிறுவனம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பொருளாதார சட்டத்திற்குட்பட்டு இருக்கும் வகையில், வழிகாட்டுதல் பெற Institute of Chartered Accountants of India (ICAI) நிறுவனத்துடனும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சியாக அமைந்திட World Resource Institute (WRI) நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டங்கள் அனைத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தொழில் ஆணையரகத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும்.

திருப்பூர் மாவட்டம், நாரணபுரத்தில் ரூ.15.34 கோடி திட்ட மதிப்பீட்டில் பின்னலாடை தயாரிக்கும் குறுந்தொழில் முனைவோருக்காக பொது வசதி மையத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்த திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (SIDCO) மூலம் செயல்படுத்தப்படும். முன்னதாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ திருப்பூர் மண்டல மாநாட்டையொட்டி பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமில்லாமல் தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருந்தும். திருப்பூரை தனிமாவட்டமாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி என்று பெருமிதத்துடன் கூறினார். பெருந்தொழில்களை மட்டுமே நம்பி இருக்காமல் சிறு, குறு, நடுத்தர தொழில் ஊக்கமடைய வேண்டும் என அரசு விரும்புகிறது. அதற்கு நாம் தோள் கொடுக்க வேண்டும். தொழில்கள் சென்னையை சென்னையை அல்லது குறிப்பிட்ட மாநகரத்தை மட்டுமே மையப்படுத்தி அமைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார்.