பவானிசாகர் வனப் பகுதியில் சுருக்கு கம்பியில் புலி சிக்கி இறப்பு – 7 பேர் கைது..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. புலிகளை பாதுகாப்பதற்காக வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் அவ்வப்போது புலிகளின் இறப்பு சம்பவங்களும் நடைபெறுகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகம், கொத்தமங்கலம் வனப்பகுதியில் கடந்த 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வறண்ட நீரோடையில் துர்நாற்றம் வீசியது. இதை அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் வனவிலங்குகள் ஏதாவது இறந்து  கிடக்கிறதா என தேடி பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் புலி இறந்து கிடப்பதைக் கண்டு  வனத்துறையினர்  அதிர்ச்சி அடைந்தனர் . இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் ராஜ்குமார் அறிவுரையின் பேரில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் (பொறுப்பு) வெங்கடேஷ் முன்னிலையில் வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் புலியின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டார். இதில் உயிரிழந்த புலி ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் புலி என தெரிய வந்தது. உடல் அழுகிய நிலையில் உள்ளதால் இறப்புக்கான காரணத்தை அறிய புலியின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஹைதராபாத் உயிரியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவுகளுக்கு பின்பு புலி இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்த நிலையில் மான்கள் வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் புலி சிக்கி இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக பவானிசாகர் வனச்சார அலுவலர் சிவக்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விசாரணை மேற்கொண்ட நிலையில் பவானிசாகர் அருகே உள்ள சுஜில்குட்டை மற்றும் புங்கார் காலனி பகுதியைச் சேர்ந்த ஏழு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது ஏழு பேரும் சேர்ந்து வனப்பகுதியில் மான்களை வேட்டையாட சுருக்கு கம்பி வைத்ததாகவும், அதில் புலி சிக்கி இறந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பூதிகுப்பை கிராமத்தை சேர்ந்த சதீஸ்குமார் (27, சுஜில்குட்டை கிராமத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து (22), பத்மகுமார்(19), திவின்குமார் (17), சவுந்தரராஜன் (19), புங்கார் காலனி கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (22), பால்தினகரன்(22) ஆகிய ஏழு பேர் மீது வனவிலங்குகளை வேட்டையாடியதற்காக வன குற்ற வழக்கு பதிந்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.