மாரத்தான் போட்டியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் உள்பட 3 பேரிடம் செல்போன், பணம் வழிப்பறி- 3 பேர் கும்பல் கைவரிசை..!

கோவை: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகன் சந்துரு (வயது 19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நவ இந்தியா ரோட்டில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ. 3 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்துரு இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர்.

கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் மதுசூதனன் (42). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் மதுசூதனனை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், பணம் ரூ. 600, ஒரு ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்து மதுசூதனன் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (27). இவர் கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் நேற்று கோவை வந்தார். தனது அறைக்கு செல்வதற்காக தண்ணீர் பந்தல் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடம் முகவரி கேட்பது போல நடித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த 3 சம்பவமும் ஒரே நாளில் நடைபெற்றதால் இதில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.