இது திராவிட மண்.. இங்கு திமுக, அதிமுகவை தவிர வேறு யாரும் ஆட்சி அமைக்க முடியாது- மாஜி அமைச்சர் செங்கோட்டையன்..!

மிழகம் திராவிட மண், திமுக, அண்ணா திமுகவைத் தவிர யாரும் ஆட்சி அமைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய நகராட்சிகளில் விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கண்ட வரிகளை குறைக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகம் திராவிட மண். இந்த மண்ணில் திமுக, அண்ணா திமுகவை தவிர வேறு எந்த கட்சிகளும் காலூன்ற முடியாது. திராவிட மண்ணில் திராவிட ஆட்சி மட்டுமே நடைபெறும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் அதிமுக தான் வெற்றி பெறும். அதிமுகவை வீழ்த்த சிலர் கனவு காண்கிறார்கள், எண்ணுகிறார்கள். இந்த திராவிட மண்ணில் எவராலும் அதிமுகவை வீழ்த்த முடியாது” எனக் கூறினார்.