மேகதாது அணை பிரச்சனையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை- அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்.!!

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும், தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்னையில் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

மேகதாது பிரச்னையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமைச்சர் துரைமுருகன்

கடந்த மே மாதம் கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து டி.கே.சிவகுமார் கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சாராக பதவியேற்றார். மேலும், அவருக்கு நீர்வளத்துறை அமைச்சர் பொறுப்பாக வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மகளிருக்கு இலவச பேருந்து, இல்லத்தரசிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது. அதேநேரம், மேகதாது அணையின் பணிக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என டிகே சிவகுமார் அறிவித்தார்.

இந்த நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் விரைவில் அணை கட்டுவோம்எ எனவும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள், கட்சித் தலைவர்கள் தரப்பில் இருந்தும் மற்றும் விவசாயிகள் தரப்பில் எதிர்ப்புகளும், கண்டனங்களும் வந்த நிலையில் உள்ளது.

இதனிடையே, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், “தண்ணீருக்காக நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டோம். ஒருபோதும் இதில் இருந்து பின்வாங்க மாட்டோம். இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த வித பாதிப்பும் கிடையாது. ஆகையால், இதை சகோதரத்துவத்துடன் தமிழ்நாடு அணுக வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்டத்தில் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “வேலூர் மாவட்டத்தில் தற்போது காவிரி குடிநீர், பராமரிப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அதற்கான பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஆகையால், வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு மாற்று ஏற்பாடுகளை செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மேலும், மக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பின்னர் மேகதாது தொடர்பான பிரச்னை குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “காவிரியில் மேகதாது மட்டும் பிரச்னை அல்ல. நான் இதை 30 ஆண்டுகளாக கூர்ந்து கவனித்து வருகிறேன். காவேரி தொடர்பான தீர்ப்பாயத்தை நடத்திய அனுபவம் எனக்கு உண்டு.

காவிரியில் இருந்து எவ்வளவு தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் பிரச்னை எழுப்பவில்லை. உச்ச நீதிமன்றத்திலும் இப்பிரச்சனை எழுப்பவில்லை. எனவே, கர்நாடகா துணை முதலமைச்சர் ஏதோ ஒரு பிரச்னை எழுப்ப வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு அரசு மேகதாது பிரச்னையை ஒரு போதும் விட்டுக் கொடுக்காது.

இந்தப் பிரச்னையில் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும். மேலும், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள மலைப்பகுதியில், அப்பகுதி மக்களின் நலன் கருதி சாலை அமைக்க வனத் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி கிடைத்த உடன் அப்பகுதியில் சாலை அமைக்கப்படும்” என கூறினார்.