10 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி … வால்பாறை தபால் நிலையத்தில் ரெயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் தொடக்கம்..!

கோவை மாவட்டம் வால்பாறை நகரம் மற்றும் தேயிலை தோட்டங்களில் பல்வேறு
மாநிலங்களை சேர்ந்தவர் ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் வசித்து
வருகின்றனர்.
இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல முன்பதிவு
செய்யவும், பயணத்தை கைவிடும் போது டிக்கெட்டை ரத்து செய்யவும்
வால்பாறையில் இருந்து 3 மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்து
பொள்ளாச்சிக்கும், உடுமலைக்கு செல்ல வேண்டியது உள்ளது.
ரெயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன்பு பயணிகள் பட்டியல் இறுதி
செய்யப்பட்டு விடும். காத்திருக்கும் பட்டியலில் உள்ளவர்கள் ரெயில்
புறப்படும் அரை மணி நேரத்துக்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால்
மட்டுமே படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டில் ரூ.35, குளிர்சாதன வசதி கொண்ட
டிக்கெட்டில் ரூ.60 பிடித்தம் செய்து கொண்டு, மீதி தொகை பயணிகளுக்கு
கிடைக்கும்.
ஆனால் வால்பாறையில் முன்பதிவு மையம் வசதி இல்லாததால் காலதாமதமாக வந்து
டிக்கெட்டை ரத்து செய்தால் முழு தொகையும் இழக்க நேரிடும். இதனால்
ரெயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனையடுத்து வால்பாறையில் ரெயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் போராடி வந்தனர். இந்தநிலையில் வால்பாறையில் தெற்கு ரெயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இணையதள சேவை குறைபாட்டால் முன்பதிவு தொடங்கப்படாமல் இருந்தது.
இதனையடுத்து வால்பாறை தபால் நிலையத்தில் பாலக்காடு ரெயில்வே கோட்ட
அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அங்கு ரெயில் டிக்கெட்
முன்பதிவு மையம் தொடங்கப்பட்டது.

இது குறித்து வால்பாறை தபால் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
இணையதள சேவை பிரச்சினை காரணமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க முடியவில்லை. தற்போது பிரச்சினை சரிசெய்யப்பட்டதால் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது. வேலை நாட்களில் பொதுமக்கள் நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி ரெயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.