தமிழக மீனவர்கள் 9 பேரை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்..!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து கடந்த 25ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 9 மீனவர்கள் கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் .

அவர்களை விடுவிக்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இலங்கை நீதிமன்றம் விதித்த தண்டனை காலம் இன்றுடன் முடிவடைவதால் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 25ம் தேதி நெடுந்தீவு அருகே மண்டபம் பகுதி மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது விடுதலையான மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் இன்று காலை 9 மீனவர்களையும் விடுதலை செய்து அறிவித்த நிலையில் , அவர்களை தமிழகத்திற்கு அனுப்புவதற்கான பணிகள் தற்போது இந்திய தூதரக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..