மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருமகன்… கொதிக்கும் நீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றிய மனைவி… கணவன் பலியான அதிர்ச்சி சம்பவம் .!!

திருச்சி ; திருச்சி அருகே மாமியரிடம் தவறாக நடக்க முயன்ற குடிகார கணவர் மீது, மனைவியும், மாமியாரும் சேர்ந்து சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றியதில் அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (27). இவர் டயானா மேரி (22) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஆட்டோ டிரைவான செல்வராஜ் குடிபழக்கம் உடையவர் என்பதால் அடிக்கடி கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடைந்த மனைவி டயானா மேரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் டயானாமேரி கணவருடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் தனது மனைவியை தேடி மாமியார் வீட்டிற்கு குடிபோதையில் சென்றார். அங்கு டயானாமேரியிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு செல்வராஜ் அழைத்துள்ளார். இதில் இருவர் இடையே தகராறு ஏற்பட்டதில் செல்வராஜ், தனது மனைவி டயானா மேரியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த டயானா மேரி வீட்டில் இருந்த அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து எடுத்து வந்து சற்றும் யோசிக்காமல் கணவர் மீது ஊற்றிவிட்டார். இதில் உடல் வெந்து செல்வராஜ் வலியால் அலறி துடித்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் இன்று செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி ஊற்றிய சுடுநீர் அவரது அடிவயிற்றில் பட்டு ஆழமான காயம் ஏற்பட்டதால் கிட்னி பாதித்து இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி டயானா மேரி, மாமியார் இன்னாசியம்மாள் (43) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலையுண்ட செல்வராஜ், தனது மாமியாருடன் தவறவாக நடக்க முயற்சி செய்ததாகவும், அதனை மனைவி மற்றும் மாமியார் கண்டித்த போதும், தொடர்ந்து அவர் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் கொதிக்கும் நீரில் மிளகாய் பொடியை கலந்து ஊற்றி கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து டயானாமேரி, இன்னாசி அம்மாள் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.