பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள சரவணா நகரை சேர்ந்தவர் நவீன். இவரது மனைவி சாஜிதா (வயது 35). அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர். மறுநாள் வீட்டிற்கு திரும்பிய சாஜிதா பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.