இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பரவவிட்டவர் கைது..!

கோவையை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் தனது குடும்பத்துடன் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார் .இந்த நிறுவனத்தில் விருதுநகர் மாவட்டம் ,ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்த அஜித்குமார் (வயது 26) என்பவர் எந்திரம் ஒன்றை விற்பனை செய்ய கொடுத்தார். அந்த எந்திரத்தை இளம்பெண் விற்பனை செய்து ரூ 1 லட்சத்து 65 ஆயிரத்தை அஜித்குமாரிடம் கொடுத்தார். ஆனால் அந்த எதிரத்துக்கு கூடுதலாக அவர் ரூ. 60 ஆயிரம் கேட்டுள்ளார் . அந்த பெண் கொடுக்க மறுத்தார். பலமுறை அந்த பெண்ணை சந்தித்து எந்திரத்துக்கு கூடுதல் பணம் கேட்ட போதும் அவர் கொடுக்கவில்லை .எனவே அவரை மிரட்டிய அஜித்குமார் அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக”மார்பிங்” செய்து இளம்பெண்ணின் உறவினர் நண்பர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி உள்ளார். அத்துடன் அவர் அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் போலீசார் அஜித்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அவரை நேற்று கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.