திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை மனைவியுடன் சேர்ந்து தாக்கிய கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது..!

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் திருமணம் முடிந்து கணவருடன் வாழ்க்கையை தொடங்கினார். அப்போது அந்த பெண் அதே பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சொந்த வேலை காரணமாக சென்று வந்தார். அப்போது கம்ப்யூட்டர் சென்டரின் உரிமையாளரான பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 33) என்பவருக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சுரேஷ்குமாருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது.

இதையடுத்து இருவரும் தங்களது செல்போன் எண்களை பறிமாறிக் கொண்டனர். அப்போது அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி சுரேஷ்குமார் பழக தொடங்கினார். இது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது

இதையடுத்து அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் தான் மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நாளடைவில் தனது மனைவி, சுரேஷ்குமார் என்பவருடன் நெருங்கி பழகுவதை அவர் அறிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர், அவரிடம் இருந்து விவகாரத்து பெற்று கொண்டார். கணவர் பிரிந்து சென்றதால் அந்த பெண், எந்தவித இடையூறு இல்லாமல் சுரேஷ்குமாருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இவர்கள் 2 பேரும் கணவன் – மனைவி போல வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த பெண் சுரேஷ்குமாரிடம் நமக்கு குழந்தை பிறந்துவிட்டதால் விரைவில் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சுரேஷ்குமார் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். இந்த நிலையில் குழந்தை பிறந்து 4 ஆண்டுகள் ஆகியதால், அந்த பெண் இனியும் தாமதிக்க கூடாது என்று கூறி சுரேஷ்குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், சம்பவத்தன்று தனது மனைவி ரேவதியுடன் (33) கள்ளக் காதலி வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், ரேவதி ஆகியோர் சேர்ந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினர். அப்போது, சுரேஷ்குமார் இனியும் திருமணம் செய்ய வலியுறுத்தினால் கொலை செய்து விடுவேன் என்று கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையை இழந்த அந்த பெண் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை ஏமாற்றியதுடன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்த சுரேஷ்குமார் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் ரத்தினபுரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சுரேஷ்குமாரின் மனைவி ரேவதியையும் போலீசார் தேடி வருகிறார்கள். கள்ளக் காதலனை நம்பி கணவரை விவகாரத்து செய்த அந்த பெண், தற்போது இருவரும் கைவிட்ட நிலையில் வேறு வழியில்லாமல் போலீஸ் நிலைய படியேறியுள்ளார். ஒழுக்கக்கேடான இந்த பெண்ணின் வாழ்க்கை கடைசியில் போலீஸ் நிலையம் வரை வந்து விட்டது.