மறைந்த நடிகர் மயில்சாமியின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு..

மாரடைப்பால் காலமான பிரபல நடிகர் மயில்சாமியின் உடலுக்கு இன்று இறுதிச்டசங்கு நடைபெறுகிறது.

தமிழ் திரையுல்கில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மயில்சாமி(57) .

சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலில் டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மயில்சாமி, கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில்வீடு திரும்பினார். இதனையடுத்து 3.30 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார். பின்னர் அவரை உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, நடிகர்கள் ராதாரவி, சத்யராஜ், பாக்கியராஜ், பாண்டியராஜன், சூரி, ஜெயராம், சித்தார்த், மனோபாலா, கோவை சரளா, ரேகா, செந்தில், எம்.எஸ்.பாஸ்கர், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் திரண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இன்று காலை வரையிலும் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் மயில்சாமியின் உடலுக்கு இறுதிச் சடங்கு இன்று காலை நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து காலை 10 மணியளவில் இறுதி சடங்குக்கு பின் வடபழனி ஏ.வி.எம் மயானத்தில், மயில்சாமி உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மயில்சாமிக்கு கீதா என்ற மனைவி, யுவன், அன்பு என்ற மகன்கள் உள்ளனர். இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். நடிகராக மட்டுமின்றி மிமிக்ரி கலைஞர், சிறந்த சமூக சேவர் என மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மயில்சாமி.