சென்னை செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை, கியூ பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை.!!

சென்னை செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். கடையின் உரிமையாளரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

சென்னை மண்ணடி 2- வது கடற்கரை சாலையில் மன்சூர் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து வந்த உளவுத்துறை அதிகாரிகள் இந்த கடையில் திடீரென சோதனை நடத்தினர். நேற்று பெங்களூரில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தியதாகவும், அவர் அளித்த தகவலின் பேரில் சென்னையில் மன்சூரின் செல்போன் கடையில் அதிரடியாக சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சோதனையின் போது தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரும் உடன் இருந்துள்ளனர். இந்த விசாரணையில் மன்சூர் ராயபுரத்தை சேர்ந்தவர் என்பதும், செல்போன் கடையை இவரது சகோதரர்கள் ரியாஸ் மற்றும் கபீர் நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது. மன்சூரை விசாரணைக்காக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். ஆனால் எந்த வழக்கிற்காக இந்த சோதனை என்பது தெரிவிக்கப்படவில்லை.