பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்ல சென்னையில் 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்..!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக மாதவரம் , கே.கே.நகர் , தாம்பரம் மெப்ஸ் , தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் , பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 6 பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் செல்வார்கள், இதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஜன.12 முதல் ஜன.14 வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக ஜன.18 முதல் ஜன.19 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்பேரில், சென்னையில் 6 வெவ்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாதவரம் புதிய பேருந்து நிலையம்: ஆந்திரா செல்லும் பேருந்துகள் ரெட்ஹில்ஸ் பொன்னேரி கும்முடிப்பூண்டி ஊத்துக்கோட்டை வழியாக செல்லும்.

கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையம்பாண்டிச்சேரி கடலூர் சிதம்பரம் பேருந்துகள் கத்திப்பாரா பாலம் எஸ்.வி.படேல் ரோடு, கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்லும்.

தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையம்:திண்டிவனம் விக்கிரவாண்டி பண்ருட்டி கும்பகோணம் தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.

தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையம்: திண்டிவனம் வழியாக :- திருவண்ணாமலை, போளுர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பேருந்துகள் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்லும்.

பூந்தமல்லி பேருந்து நிலையம்: வேலூர், ஆரணி, ஆற்காடு திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு பேருந்து நிலையம் (CMBT): மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களுர் செல்லும் பேருந்துகள்.

  • அனைத்து பயணிகளும் மேற்கண்ட ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு, அனைத்து சாலைகளிலும் சீரான போக்குவரத்துக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • சிறப்பு இயக்க பேருந்து நிலையங்களுக்கு பயணிக்க மாநகர போக்குவரத்து கழகம் சிறப்பு இணைப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்கிறது.
  • தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் , அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் ஆம்னி பேருந்துகள் பின்வரும் வழித்தடங்களில் செல்லும்.
  • கோயம்பேடு CMBT லிருந்து அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளும் தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூரில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்ல பூந்தமல்லி சாலை, வெளிவட்டச் சாலை வழியாக ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்குச் செல்லும்.
  • வழக்கம் போல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடையும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்குளத்தூர் வழியாக செல்லாது.
  • இதேபோல் கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நாசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடைய வேண்டும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்குளத்தூர் வழியாக செல்லாது.
  • கிழக்கு கடற்கரை சாலை நோக்கி ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, கத்திபாரா, கிண்டி, சர்தார் படேல் சாலை (OMR, ECR) வழியாக போக்குவரத்து காவல்துறையின் ஒப்புதலுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும்.
  • ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, பூந்தமல்லி சாலை, CMRL, ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் ஆகிய இடங்களில் ஏறும் இடங்களைத் தவிர்க்க வேண்டும், அதற்குப் பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு அல்லது ஊரப்பாக்கத்திலிருந்து ஏற்றிச் செல்லலாம்.
  • கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருக்கழுக்குன்றம் – செங்கல்பட்டு அல்லது ஶ்ரீ பெரும்புதூர் – செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து பயணிகளும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.