போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் பைக் மோதி வாலிபர் பலி..

கோவை மாவட்டம் காரமடை டீச்சர்ஸ் காலனியில் உள்ள புருஷோத்தமன் நகரை சேர்ந்தவர் அருள் தாஸ். இவரது மகன் ஜோவா பிரின்ஸ் சாலமோன் (வயது 19) இவர் நேற்று மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். காரமடையில் ஒரு தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது திடீரென்று நிலைத் தடுமாறி போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் பைக் மோதி படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது தம்பி ஆரோன் காரமடை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.