பணம் திருடியதாக டாஸ்மாக் பார் ஊழியர் அடித்து கொலை – 4 பேர் கைது..!

கோவை க.க.சாவடி அருகே வாளையார் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகே பாரும் உள்ளது. அந்த பாரை கோவை புதூரை சேர்ந்த  சதீஷ்குமார் (வயது 31) ஸ்டான்லி ( வயது 33) ஆகியோர் நடத்தி வருகிறார்கள். இங்கு நவக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதியை சேர்ந்த மணிகண்டன் ( வயது 35) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 10-ம் தேதி வழக்கம் போல் டாஸ்மாக் பாரில் வேலையில் இருந்தார் .அப்போது அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பணப்பையை மறந்து வைத்துவிட்டு சென்றார். அவர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்தப் பணப் பையை காணவில்லை. இதுகுறித்து அவர் பார் உரிமையாளர்கள் சதீஷ்குமார், ஸ்டான்லி, ஆகியோரிடம் கூறினார் .இதை யடுத்து அவர்கள் மணிகண்டனை தொடர்பு கொண்டு பணப்பையை எடுத்தாயா? என்று கேட்டனர். அதற்கு அவர் எடுக்கவில்லை என்று கூறினார். இதை தொடர்ந்து அவர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பணப்பையை மணிகண்டன் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து பார் உ ரிமையாளர்கள் உடனே மணிகண்டனை போனில் தொடர்பு கொண்டு நீ தான் பணப்பையை எடுத்துள்ளாய். அது கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்துள்ளது.பணத்தைக் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு கூறினார்.அதன்படி அந்தப் பையை கொண்டு வந்து ஒப்படைத்தார். ஆனால் அதற்குள் பணம் இல்லை. பணத்தை எங்கே? என்று கேட்டபோது மணிகண்டன் அங்கிருந்து திடீரென்று ஓட்டம் பிடித்தார். அவரை சதிஷ்குமார், ஸ்டான்லி மற்றும் இவர்களின் நண்பர்களான கோவை புதூரைச் சேர்ந்த கண்ணன் (வயது 35) அண்ணாதுரை ( வயது 32) ஆகியோர் காரில் துரத்திச் சென்றனர். வாளையார் டேம் ரோட்டில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் வைத்து அவரை மடக்கி பிடித்தனர் .பின்னர் அவர்கள் மணிகண்டனை சரமாரி தாக்கியதாக தெரிகிறது. இதில் மயங்கிய மணிகண்டனை காரில் ஏற்றிக்கொண்டு டாஸ்மாக் பாருக்கு கொண்டு வந்து போட்டு விட்டு சென்றனர் .நேற்றுமுன் தினம் அதிகாலையில் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை யடுத்து அங்கிருந்தவர்கள் அவரை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் மணிகண்டன் நேற்று உயிரிழந்தார் .இந்த வழக்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் தனிப்படையினர் மணிகண்டனை அடித்து கொலை செய்ததாக சதீஷ்குமார் ,ஸ்டான்லி, கண்ணன், அண்ணாதுரை ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர். 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.