தமிழக அரசு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கும் – முதல்வர் ஸ்டாலின் உறுதி.!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில், ஜி20 தொடர்பான கருத்தரங்குகளுக்கு தமிழ்நாடு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை அடுத்து, அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில், குடியரசு தலைவர் மாளிகையில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி ஆகிய உயர் விழுமியங்கலை உலகளவில் கொண்டு செல்ல பிரதமர் மோடி இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார் என உறுதியாக நம்புவதாக கூறினார்.

ஜி20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம் என்று கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது பெருமை மிக்க தருணம் என்றும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் மனதிலும், இந்தப் பெருமை என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் கடின உழைப்பு மற்றும் சர்வதேச தலைவர்களுடன் இருக்கும் தனிப்பட்ட நல்லுறவு ஆகியவையே இதற்கு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, ஜி-20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றதன் மூலம் சர்வதேச அரங்கில் நம் தேசத்தின் மதிப்பு உயர்ந்திருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.