தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை கிடுகிடு உயர்வு… பொது மக்களுக்கு அதிர்ச்சி செய்தி.!!

த்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் சமீபகாலமாக காய்கறிகளின் விலை உயர்வை தொடர்ந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படக்கூடிய பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட எல்லா பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மளிகை பொருட்கள் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும் விலை உயர்த்தப்பட்ட பின்னர் எந்த பொருட்களின் விலையையும் மீண்டும் வியாபாரிகள் குறைப்பது இல்லை.

இன்னொருபுறம் சாமான்ய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விலை இன்னும் குறைந்தபாடில்லை. இதனால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காய்கறிகள் பயன்பாட்டை குறைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது அரிசி விலையும் கடுமையாக கூடியுள்ளது. நமது அன்றாட உணவில் அரிசியின் பங்கு இன்றியமையாதது. காலை உணவாக இட்லி, தோசையும் மதியம் சாப்பாடு வகையிலும் அரிசியை அதிகளவில் பயன்படுத்துகிறோம். பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதற்கு அரிசி ஆலைகள் மற்றும் அரிசி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்தியாவசியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதால் அரிசி உள்ளிட்டவற்றின் விலை உயரும் என்று அவர்கள் தெரிவித்தனர். தளர்வான அரிசி ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது என்றாலும், மாநில உணவுத் துறையானது அனைத்து கடைக்காரர்களுக்கும் அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை பேக் செய்யப்பட்ட வடிவில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்

இதனையடுத்து, சில மாதங்களுக்குப் முன்பு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள அரிசியின் விலையானது, தற்போது 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. 25 கிலோ சாப்பாட்டு அரிசி மூட்டை ரூ.200 வரை கூடியுள்ளது. சில்லரை விற்பனையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

தரமான முதல் ரக சாப்பாட்டு அரிசி 25 கிலோ மூட்டை கடந்த மாதத்தில் ரூ.1,400 ஆக இருந்த நிலையில், அவை தற்போது ரூ.1,600 ஆகவும், 2-வது ரக சாப்பாட்டு அரிசி ரூ.1,200-ல் இருந்து ரூ.1,400 ஆகவும் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூடியுள்ளது. இதே போல இட்லி அரிசியும் 25 கிலோ மூட்டை ரூ.850-ல் இருந்து ரூ.950 ஆக உயர்ந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளது மற்றும் வடமாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாகவே அரிசி விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மதுரையில் அரிசி விலை கிலோவுக்கு 8ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது. நாட்டு பொன்னி ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 55 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடக பொன்னி விலை ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் உயர்ந்து கிலோ 42 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக விற்கப்படுகிறது.

பிரியாணி அரிசி ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்பட்ட நிலையில் தற்போது 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பச்சரிசி விலை ஒரு கிலோவிற்கு 12 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக விற்கப்படுகிறது. பச்சரிசி குருணை ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் அதிகரித்து, 25 ரூபாயிலிருந்து 33 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.