கோவையில் இன்று காலை திடீர் மழை… குடை பிடித்தப்படி பள்ளிக்கு சென்ற மாணவர்கள்..!

கோவையில் கடந்த சில நாட்களாக கனமழையும், அவ்வபோது சாரல் மழையும் பெய்து
வருகிறது. வரும் நாட்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்
அறிவித்திருந்தது.

ஆனால் லேசான தூரலோடு குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் இன்று
காலை திடீரென ஆங்காங்கே மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை
ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் மாலை நேரங்களில் தான் மழை பெய்து
வருகிறது. இன்று காலையே மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குடை பிடித்தப்படி சென்றனர்.சிலர்
ஆபத்தை உணராமல் மோட்டார் சைக்கிளில் குடைபிடித்து சென்றனர். கோவை
சரவணம்பட்டி, கணுவாய், பீளமேடு, கவுண்டம்பாளையம், பெரிய
நாயக்கன்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளையம், வடகோவை உள்ளிட்ட பகுதியில் மிதமான மழை பெய்தது.

பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் மழை பெய்து வருவதால்
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் வால்பாறையில் தொடர்ந்து
மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் இதே போல மழை பெய்தால் வெயிலின் தாக்கம் இல்லாமல்
தப்பித்து கொள்ளலாம். மழையினால் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில்
தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள்
சிரமம் அடைந்தனர்.