பினராயி விஜயன் வீட்டில் திடீர் ரெய்டு

ட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் 242 வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 18 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் மணல் ஆலை நிறுவனமான சி.எம்.ஆர்.எல் கம்பெனியிடம் இருந்து, கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலாஜிக் நிறுவனம் ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வீடு, சி.எம்.ஆர்.எல். நிர்வாக இயக்குநர் சசிதரன் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.இதில், ​​பல்வேறு டிஜிட்டல் ஆதாரங்கள், முதலீடுகள், வைப்புத்தொகைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 242 கணக்குகளில் இருந்த 18 கோடியே 36 லட்சம் ரூபாயை முடக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், பினராயி விஜயன் வீட்டின் முன்பு திரண்ட கட்சி தொண்டர்கள் செங்கற்கள் மற்றும் இரும்புக் கம்பிகளைக் கொண்டு அமலாக்கத்துறையினரின் வாகனங்களைத் தாக்கியதாகவும், இதில், வாகன ஓட்டுநர் ஒருவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.