சப்-இன்ஸ்பெக்டர் மகள் காதலனுடன் பாதுகாப்பு கேட்டு வால்பாறை காவல் நிலையத்தில் தஞ்சம்..!

கோவை: திண்டுக்கல் ஜி.எஸ். நகரை சேர்ந்தவர் கனகவேல். இவர் திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஜெயசூர்யா (வயது 22). ஈச்சனாரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
காதல்
இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் டி. பாறைபட்டியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் உதயசூரியன் (23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் ஜெயசூர்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. உதயசூரியன் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த காதலர்கள் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி கடந்த 10-ந் தேதி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்தனர். இதனை தொடர்ந்து 2 பேரும் பெற்றோருக்கு பயந்து வால்பாறைக்கு சென்றனர். சோலையாறு அணையில் ஒரு காட்டேஜில் அறை எடுத்து தங்கினர். பின்னர் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வால்பாறை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது குறித்து 2 பேரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.