குனியமுத்தூரில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 2 பேர் கைது:கோவையில் முழு அமைதி திரும்பியது- போலீஸ் பாலகிருஷ்ணன் பேட்டி..!

கோவை அருகே உள்ள குனியமுத்தூரில் 2 இடங்களில் பெட்ரோல், கெரோசின் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது :-கோவை குனியமுத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் ரகுவின் கார் மீது கடந்த 23ஆம் தேதி மர்ம எரிபொருளை வீசியதில் கார் தீப்பற்றி எரிந்தது. அன்று இரவு 11 மணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பரத் என்பவர் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டிலில் தீயை பற்றவைத்து எரிந்தனர். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வெடிபொருள் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைஆய்வு செய்தனர். மேலும் நுண்ணறிவு பிரிவு போலீசரும் விசாரணைநடத்தினர். இதில் தொடர்புடைய அறிவொளி நகர சேர்ந்த ஜேசுராஜன் (வயது 34) குனியமுத்தூர் திருவள்ளூர் நகரை சேர்ந்த இலியாஸ் (வயது 34) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் பொறுப்பு வகிக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். .கோவை ஒப்பணக்கார வீதி ,பாரதிய ஜனதா அலுவலகம் உள்ளிட்ட மேலும் 4 இடங்களில் நடந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் குறித்தும் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதில் 2 சம்பவங்களில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் .பஸ்கள் மீது கல்வீசியவர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் தற்போது அமைதி திரும்பி உள்ளது. பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அவர்களும் அமைதிக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர். நகரில் பதற்றம் எதுவும் இல்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை .இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணை போலீஸ் கமிஷனர் சிலம்பரசன் உடன் இருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேசுராஜன் 87 வது வார்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவராகவும் ,இலியாஸ் அந்த கட்சியின் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.