இலங்கை தாதா அங்கோட லொக்கா இறந்த வழக்கு விசாரணை முடிந்தது

இலங்கை தாதா அங்கோட லொக்கா இறந்த வழக்கு விசாரணை முடிந்தது

இலங்கை தாதா அங்கோட லொக்கா மாரடைப்பால் தான் இறந்தார் என்று சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு, ஒரு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அங்கோட லொக்கா என்ற இலங்கை தாதா மீது இலங்கை கொழும்பு நகரில் 8 – க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் இருந்தது. அந்த நாட்டு போலீசாரால் அவர் தேடப்பட்டு வந்தார். கடந்த 2017 – ம் ஆண்டு சட்ட விரோதமாக தமிழகத்துக்கு வந்த அவர், 2020 – ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பாலாஜி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து பதுங்கி இருந்தார். அவருடன் 27 வயதான அமன்னே தன்ஸீ என்ற பெண்ணும் அவருடன் தங்கி இருந்தார். கடந்த 2020 – ம் ஆண்டு ஜூலை 3 – ந் தேதி அன்று, அங்கோட லொக்காவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது, அவர் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, இறந்தவரின் உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது, மேலும் இறந்தவரின் அடையாளத்தை மறைத்ததாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, அவரது நண்பர் தியானேஸ்வரன் மற்றும் அமன்னே தன்ஸீ ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிந்தது

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

“நாங்கள் விசாரணையை முடித்து, இது திடீர் மாரடைப்பு வழக்கு என்பதை உறுதிப்படுத்தி உள்ளோம், மேலும் டி.என்.ஏ பரிசோதனை மூலம் இறந்தது அங்கோட லொக்கா தான் என்று அடையாளத்தை நாங்கள் நிரூபித்து உள்ளோம். ஒரு வார காலத்திற்குள் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (சிஜேஎம்) நீதிமன்றத்தில் வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்”. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

துப்பாக்கியை கடத்தி வந்தது, போலியாக ஆதார் கார்டு பெற்றது ஆகிய வழக்குகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.