ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி..

கொரோனாவை தடுக்க ஒரு தவணை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது..

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கவில்லை. கொரோனா தொற்று அவ்வப்போது உருமாற்றம் அடைந்து பரவி வருவதால் மருந்து கண்டுபிடிப்பது மருத்துவத்துறைக்கு சவாலாக உள்ளது. எனினும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.

அந்த வகையில், இந்தியாவில் அது ஒரு இயக்கமாக தொடங்கப்பட்டு மக்களுக்கு விறுவிறுப்பாக தடுப்பூசி செலுத்தப்படுகின்றன. இந்த நிலையில், கொரோனாவை தடுக்க, ஒரு தவணை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்கியிருக்கிறது.

இது இந்தியாவில் அனுமதிக்கப்படும் 9-வது தடுப்பூசி மருந்து. தொற்று நோய்க்கு எதிரான நாட்டின் கூட்டுப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் உள்ளிட்டவற்றை நிபுணர் குழுவில் முழுமையாக விளக்கிய டாக்டர் ரெட்டிஸ் லேப்ரட்டரிஸ் நிறுவனம், அவசர கால பயன்பாடு மற்றும் பூஸ்டர் தடுப்பூசியாக பயன்படுத்த ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதி கோரியது. ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி 29 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தது. இதையடுத்து அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை செலுத்திய 21 நாட்களுக்குப் பிறகு கொரோனாவிலிருந்து 65.4 சதவிகிதம் பாதுகாப்பு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.