குடிபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய தந்தையை சரமாரி வெட்டி கொன்ற மகன் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோமங்கலம் அருகே உள்ள கரப்பாடியை சேர்ந்தவர் சிவலிங்கம் ( வயது 48 )கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா தேவி (வயது 45) இவர்களுக்கு கார்த்திக் ( வயது 24 )என்ற மகன் உள்ளார் .இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். சிவலிங்கம் குடிப்பழக்கம் உடையவர்.இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் மனைவி சித்ராதேவியிடம் தகராறு செய்து வந்தார். இதை அவரது மகன் கார்த்திக் கண்டித்தார். இதை கேட்காமல் சிவலிங்கம் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியாக தெரிகிறது. இதனால் மகன் கார்த்திக் ஆத்திரம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பூசாரிபட்டியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சிவலிங்கம் மது அருந்த சென்றார். பின்னர் மது அருந்தி விட்டு வெளியே வரும்போது அங்கு வந்த கார்த்திக்கிற்கும், அவரது தந்தைக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தந்தை சிவலிங்கத்தை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த சிவலிங்கம் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து அதே இடத்தில் இறந்தார். பின்னர் கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடி தலை மறைவாகிவிட்டார் .இது குறித்து தகவல் அறிந்ததும் கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சிவலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள கார்த்திக் மீது கொலை வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இன்று அதிகாலையில் மகன் கார்த்திக் கைது செய்யப்பட்டார்.இவரிடம் விசாரணை நடந்து வருகிறது. குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.