பொறியியல், தொழில்நுட்பம், டிப்ளோமா படிப்புகளுக்கான செமஸ்டர் கட்டணம் திடீர் உயர்வு- அதிர்ச்சியில் மாணவர்கள்.!!

பொறியியல், தொழில்நுட்பம், டிப்ளோமா படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக், பிஆர்க், படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900 ஆகவும், அதிகபட்சமாக ரூ.1,40,900 ஆகவும் உயர்த்தி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், எம்இ, எம்டெக், எம்ஆர்க் போன்ற முதுகலை படிப்பிற்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3,04,000 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்ச கட்டணம் மற்றும் அதிகபட்ச கட்டணத்துக்குள் தங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம். 3 ஆண்டு எம்சிஏ படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500, அதிகபட்சமாக ரூ.1,94,100 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டு எம்பிஏ படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் 7-வது சம்பள கமிஷன் ஊதியத்தை வழங்கிட வேண்டும். உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189, பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 என்று ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி கட்டணத்தை குறைக்க கூடாது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் இந்த நடவடிக்கை மாணவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.